தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை உடனடியாக நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக தமிழக இளைஞர்கள், கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள், தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் தங்களது ஆதரவினை தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, பன்னாட்டு குளிர்பானமான கொக்ககோலா, பெப்சி உள்ளிட்ட பானங்களை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தடைசெய்ய வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்தது மட்டுமின்றி கொக்க கோலா, பெப்சி உள்ளிட்ட பானங்களை சாலையில் போட்டு உடைத்தும், தீயிட்டு கொழுத்தியும் வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, பல வணிகர்களும் மாணவர்களின் விழிப்புணர்வுக்கு ஆதரவு தெரிவித்து இனி தங்களது வணிகவளாகத்தில், உணவு விடுதியில் இதுபோன்ற பன்னாட்டு குளிர்பானங்களை விற்பதை தடைசெய்வதாகவும், இளநீர் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியமான பானங்களை விற்பனை செய்யப்போவதாகவும் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையின் பிரபலமான ஆர்எச்ஆர் உணவு விடுதி இனி தங்களது விடுதிகளில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆர்எச்ஆர் விடுதியின் உரிமையாளர் குருசாமி நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக இளைஞர்கள் தற்போது ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஒட்டுமொத்த உலகமும் இன்று தமிழக இளைஞர்களின் ஒற்றுமை போராட்டத்தை கண்டு வியப்படைந்துள்ளது. வெறும் 50 நபர்களால் துவங்கப்பட்ட இப்போராட்டம் தற்போது இவ்வளவு விஷ்வரூபம் எடுக்கக் காரணம் தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க நினைத்ததே ஆகும்.
ஜல்லிக்கட்டுக்காக கோவையில் போராட்டம் துவங்கிய நாள் முதல் இந்த விடுதியின் சார்பில் போராட்டக்காரர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள், இளைஞர்களின் இப்போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி விவசாயிகளையும் காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வருவது நெகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தால் தமிழக விவசாயிகள் புது உத்வேகம் பெற்றுள்ளனர்.
பன்னாட்டு தனியார் நிறுவனத்தினர் கொக்ககோலா போன்ற தொழிற்சாலைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைத்துள்ளனர். அந்த தொழிற்சாலைகள் பல ஆறுகளில் இருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீரை உரிஞ்சி எடுத்ததால் தற்போது தமிழக விவசாயத்திற்கு தண்ணீரே இல்லாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஒரு விவசாயி விவசாயம் செய்ய தண்ணீர் இன்றி முடங்கிவிடுகின்றான். ஆனால், தனியார் பன்னாட்டு நிறுவனத்தினர் தொடர்ந்து நிலத்தடி நீரையும், ஆற்று நீரையும் உரிஞ்சி எடுத்து விற்று லாபம் அடைகின்றான்.
தற்போது எங்களது ஆர்எச்ஆர் உணவு விடுதியில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு விவசாயிகளை காக்க வேண்டும், மாணவர்களின் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே ஆகும். இனி இந்நிறுவனத்தில் கொக்ககோலா, பெப்சி மற்றும் அந்நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள் கூட விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறு, பாதாம்பால், ரோஸ்மில்க், பட்டர்மில்க் மற்றும் பல பாரம்பரியமான பானங்களை விற்க முடிவெடுத்துள்ளோம்" என்றார்.