ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கூறி போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று போராட்டத்தை கைவிடுமாறு கூறிவந்த காவல்துறையினர் திடீரென போராட்டக்காரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கோவை, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்களத்தின் அருகே குவிக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்களோ அரசுத் தரப்பில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டும், மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டின் மீது இருக்கும் தடை முற்றிலுமாக நீக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்தனர்.
இதையடுத்து, போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனால் போராட்ட களத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் தடியடி மேற்கொண்டனர். பின்பு, சற்று நேரத்தில் போராட்டக்காரர்கள் வ.உ.சி. மைதானத்தில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
