வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூன்றாம் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, வாழை சாகுபடி 2015- 16 ஆம் ஆண்டு, இந்தியாவில் 0.84 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 29.12 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை வாழை உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும்.
தமிழ்நாட்டில் கோவை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும். இதில் திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி மற்றும் கோவை ஆகியவை வாழை விற்பனை செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
இவற்றுள் திருச்சி வாழைக்கு முக்கிய சந்தையாகும். திருச்சியிலிருந்து வாழை, மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது லால்குடி, புதுக்கோட்டை, முசிறி மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் இருந்து வாழையின் வரத்து திருச்சி சந்தைக்கு அதிகளவில் உள்ளது.
வர்த்தக மூலங்களின் படி, பண்டிகை காலங்களில் வாழைக்கு அதிக தேவை இருப்பதால் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டில், குறைவான மழையின் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் தேவைக்கு ஏற்ப வாழையின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த 15 ஆண்டுகளாக கோவை சந்தையில் நிலவிய பூவன் மற்றும் கற்பூரவள்ளி வாழை ரகங்களின் விலை நிலவரங்களையும், 10 ஆண்டுகள் நிலவிய நேந்திரன் வாழை நிலவரத்தையும் ஆய்வு செய்தது.
ஆய்வு முடிவின் அடிப்படையில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு விலை ரூ.13 முதல் 15, கற்பூரவள்ளி ரூ.18 முதல் 20 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.36 முதல் 38 வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003 அல்லது 0422-2431405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயனடையலாம்.