கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மாணவர்களின் அறப்போராட்டம் நேற்று வன்முறையில் முடிந்தது. போலீசார் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு விதமான தவறான தகவல்கள் மாணவர்களை சென்றடைந்தது. அந்த தகவல்கள் உண்மையானவையா? என்று ஆராயாமல், அதை பலருக்கு அவர்கள் பகிர்ந்தனர். இதன் மூலம் தேச விரோத கொள்கைகள் விரைவாக பரப்பப்பட்டது.
கோவையில் சுமார் 20 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால், 3 ஆயிரம் போலீசார் தான் உள்ளனர். இந்த பெரிய மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநகரின் பல இடங்களில் 4 ஆயிரம் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருந்த போதும் சில ஊடகங்கள் ஒரு சம்பவத்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பி இளைஞர்கள் மத்தியில் போர்க்குணத்தை உருவாக்குகிறது. தொடர்ந்து உருவாகும் போரட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்தவில்லை என்ற கருத்தையும் ஊடகங்கள் முன் வைக்கின்றன. இதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் நடத்திய போராட்டாத்தில் சில விஷமிகள் புகுந்தனர். அவர்கள் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை மாணவர்களிடம் புகுத்த முயற்சி செய்தனர். இது தொடர்பான வீடியோ ஆதரங்கள் மற்றும் புகைப்படங்கள் காவல்துறை வசம் உள்ளது. விரைவில் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .
நேற்று கோவையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க வேண்டிய சூழல் உருவானது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கெதுவும் பதியாமல் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டனர். காந்திபுரம் பகுதியில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டகளத்தில் புகுந்த விஷமிகளின் தொடர்பை மாணவர்கள் முடித்துக்கொள்ள வேண்டும். இதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, ரேக்ளா பந்தையத்தின் மீது தடை இருந்த போதும் கொடிசியா வளாகத்தில் அதை அனுமதித்தது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விசாரிப்பதாக கூறிய காவல் ஆணையர் தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தார்.