ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பியது இடதுசாரிகளும் சில தீயசக்திகளும்தான் என கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சந்தோஷமாக வீடு திரும்பியுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமர் சிறப்பாக செயல்பட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வுகண்டுள்ளார் எனவும் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
பாராளுமன்றத்தில் திருக்குறளை ஒலிக்கச்செய்ததும், இந்தியாவெங்கும் திருக்குறளின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்ந்ததும் மத்திய அரசு நடவடிக்கைதான் என கூறினார்.
தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றிருப்பது மாணவர்களையே சாரும் எனவும், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பாரம்பரியம் அல்ல அது இந்தியாவின் பாரம்பரியம் எனவும் தேசிய விழாவாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.
மாணவர்களின் போராட்டத்தின் போது சில தீய சக்திகள் மற்றும் இடதுசாரிகள் இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்டதாகவும், அதையும் தாண்டி மாணவர்களின் ஒற்றுமையால்தான் போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக கூறினார்.
காந்திய வழியில் ஈடுபட்ட மாணவர்கள் தேசியகீதம் பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது வருந்தத்தக்கதாகவும், மாணவர்கள் நமது குடும்பத்தில் ஒருவர், அவர்கள் பிரச்சனையின் போது நான் அங்கு இருந்திருந்தால் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் அமர்ந்திருப்பேன் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த போராட்டம் குறித்து அரசியல்வாதிகள் பொதுமக்களிடம் தெளிவாக தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்ப முயன்றவர்களை உடனே அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என்றார்.