தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியும் சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி பந்தய சாலை வழியாக தாமஸ் பூங்கா வரை சென்றது.
முன்னதாக, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் து.வெங்கடேசன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, கோட்டாட்சியர் சின்னசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.