ஜல்லிக்கட்டிற்கான மாணவர்களின் போராட்டத்தை கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் திசைதிருப்பியதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளதற்கு அந்த அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தை கை விடுமாறு காவல்துறையினர் போராட்டகாரர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து காவல் துறையினர் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. இந்த நிலையில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட சில மாணவ அமைப்புகள் மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்பியதாக தெரிவித்தார்.
மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் இத்தகைய பேச்சுக்கு அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அப்துர் ரகுமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது காவல் துறை ஆணையர் அமல்ராஜ் அவதூறு பரப்பும் விதத்தில் பேசியதாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறிய அவர், தமிழக அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.