கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை துவக்கி வைத்து, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, அண்ணல் காந்தியடிகளின் உருவச் சிலைக்கு க.விஜயகார்த்திகேயன் மாலை அணிவித்தார்.



இவ்விழாவில், கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய 30 பணியாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வெகுமதி தொகையையும் நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் அதிக தனி நபர் கழிப்பிடங்களை கட்டிய கிழக்கு மண்டல இளநிலை பொறியாளர் குமரேசன் என்பவர்க்கும், பொது கழிப்பிடங்கள் மற்றும் சமுதாய கழிப்பிடங்களை சிறப்பாக கட்டிய மேற்கு மண்டல இளநிலை பொறியாளர் தியாகராஜன் என்பவர்க்கும், மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடங்களை மீட்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய மேற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் என்பவர்க்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து, அதிக வரிவசூல் செய்து சிறப்பாக பணியாற்றிய மேற்கு மண்டல சிறப்பு வரி ஆய்வாளர் மணிகண்டன் என்பவர்க்கும், ஸ்வச் பாரத் பணியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு அலுவலர் திருமால் மற்றும் துப்பரவு ஆய்வாளர் செந்தில் என்பவர்களுக்கும் பணிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், டெங்கு ஒழிப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் ஆகிய கிழக்கு மண்டலம் வார்டு- 62 கே.அசோக்குமார், மேற்கு மண்டலம் வார்டு-20 வி.நாகராஜ், தெற்கு மண்டலம் வார்டு-93 பி.மாசிலாமணி, வடக்கு மண்டலம் வார்டு- 27 கே.சம்பத்குமார், மத்திய மண்டலம் வார்டு-71 சரவணன் ஆகியோர்களுக்கும், உக்கடம் பெரிய குளத்தை புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றிய தெற்கு மண்டல உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ் மற்றும் இளநிலை பொறியாளர் கனகராஜ் ஆகியோர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஸ்வச் ஸர்வக்ஷன்- 2017 பணியில் சிறப்பாக பணியாற்றிய 5 தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் டிம்பில் லூலு, கவிதா, அனிதா ரவி, ராதா, ரூபா பிரசாந்த் ஆகியோர்களுக்கும் பணிகளை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.


இவ்விழாவில் ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்எஸ் புரம் (மேற்கு) மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களின் களரி மற்றும் நடன நிகழ்ச்சியும் ஆயுதம் கலைக்குழு மற்றும் அறம் பவுன்டேஷன் இணைந்து வழங்கிய பரையாட்டம், அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பாண்டு வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் "பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" என்று அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு ஐந்து மண்டல உதவி ஆணையர்களிடம் வழங்கி, பொது மக்களுக்கு வினியோகிக்குமாறு அறிவுறுத்தினார்.
இவ்விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த தேசிய மாணவ படையினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.