தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளிமலைப்பட்டினம் ஊராட்சி விராலியூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திடவும் மேலும் ஒவ்வொருவரும் தனிநபர் கழிப்பறையினையே பயன்படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்தார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளிமலைப்பட்டினம் ஊராட்சி விராலியூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று குடியரசுதின விழாவையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
இக்கூட்டத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்து தெரிவிக்கையில்,
கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும். அதனடிப்படையில், கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை மேற்கொள்ள தீர்மானம் மூலம் நிறைவேற்றிட மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, மேலும் ஊராட்சிக்கு எவ்வகையான பணிகளைப் பெற வேண்டும் என்பதற்காக ஆலோசிக்கவும் இக்கூட்டம் பயன்பெறும்.
அதனால், தங்கள் பகுதியில் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் போது எல்லோரும் தவறாமல் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களைப் பெறுவதில் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
மேலும், வெள்ளிமலை ஊராட்சியில் சுமார் 1005 வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிறை கட்டப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். காரணம் கோவை மாவட்டம் திறந்தவெளி மலம் கழித்தழற்ற தூய்மை மாவட்டமாக அறிவிக்க உள்ளதால் அனைத்து ஊராட்சிகளும் உறுதுணையாக இருந்து திறந்தவெளி மலம் கழித்தழற்ற பகுதியாக மாறிட வேண்டும்.
மேலும், ஊராட்சி பகுதியில் தற்பொழுது வறட்சி காரணமாக குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளதையோட்டி குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் சில வைரஸ் கொசுக்களால் கொடிய நோய்கள் உருவாகும் சூழல் ஏற்படுகிறது.
குடிதண்ணீர் வைக்கும் பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்ய பாதுகாப்பான முறையில் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், இப்பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ள்பட்டு வருவதுடன் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை வசதி, தெருவிளக்கு, அங்கன்வாடி மையம் விரிவாக்கம், தனிநபர் கழிப்பறை கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூய்மை காவலர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை சேகரிக்கப்பட்டு செயற்கை உரங்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதுபோல் ஊராட்சியின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து அரசுத்திட்டங்களை பயன்படுத்தி பொருளாதாரம் முன்னேற்றம் பெற்றுக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.
பின்னர், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான முதற்கட்ட நிதியாக ரூ.1.5 லட்சத்திற்கான காசோலையினையும், மற்றும் பணியின்போது இறந்த சுகாதார பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்திற்கான காசோலையினையும் வழங்கியதுடன் புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற 10 நபர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தீபன், சீனிவாசன், ஊராட்சி செயலர் மாரப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.