கோவையில் பீட்டாவின் துணை அமைப்பான ஹுயுமன் அனிமல் சொசைட்டி (ஹெச்ஏஎஸ்) சார்பில் நடைபெறவிருந்த பிரபல பாடகி சித்ரா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி மக்களின் கடும் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழக மக்களுமே பீட்டாவுக்கு எதிராக கொந்தளித்தாலும் அதன் துணை அமைப்புகள் வெளிநாட்டு நிதியின் ஊக்கத்தால் அடங்க மறுத்து வருகின்றனர். தற்போது, மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தில் அங்கீகாரம் பெற்ற பீட்டாவின் மற்றொரு துணையான ஹியூமன் அனிமல் சொசைட்டி கோவையில் வரும் 29-ந் தேதியன்று பாடகி சித்ராவை வைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை தமிழ் மண்ணில் நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தது அந்த அமைப்பு. இந்த நிகழ்ச்சிக்கு பாடகி சித்ராவும் அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அப்பணத்தைக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு தொடர்வதற்கும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காகவும் பயன்படுத்த உள்ளதாகவும் அந்த அமைப்பினர் தகவல் வெளியிட்டனர்.
தமிழர்களிடம் இருந்து கட்டணமாக பணத்தைப்பெற்று அதில் தமிழக மக்களின் பாரம்பரிய அடையாளத்தையே அழிக்கும் இந்நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், அலறிப் போன பீட்டாவின் குட்டி ஹுயுமன் அனிமல் சொசைட்டி தற்போது பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.