கோயமுத்தூர் 'யெங் இந்தியன்' சேப்டர்ஸ் அமைப்பின் சார்பில் இன்று "கோவை விழா 2017" துவக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கோவை மாவட்டத்தின் பிரபலமான புரூக்பீல்ட் வனிகவளாகத்தில் நடைபெறவுள்ள இதன் துவக்க நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், கோயமுத்தூர் யெங் இந்தியன் சேப்டர்ஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட "கோவை விழா பாட்டு" வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
மேலும், கடந்த ஒரு வருடமாக யெங் இந்தியன் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவை, 'நோ ஹாரன்', குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு, 'ஸ்வச் பாரத்' தூய்மை பணி உள்ளிட்டவை குறித்து வீடியோவும் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து, கோவையின் சமூக மேம்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கவுரவப்படுத்தப்பட உள்ளனர். பின், நடிகர் ஸ்ரீகாந்த் பார்வையாளர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
முன்னதாக, கோவை விழா இன்று துவங்கி வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை புரூக்பீல்ட் வனிகவளாகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நடைபெறும் எனவும், இவ்விழாவின் போது பல்வேறு தனியார் அமைப்புகள் கோவை யெங் இந்தியன் சேப்டர்ஸ் உடன் இணைந்து அவ்வமைப்பின் பேனரின் கீழ் 90 நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் ஏராளமானோர் இதில் பங்குபெருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.