கோவையில் ஜல்லிக்கட்டு வேண்டி வ.உ.சி.மைதானதில் நடைபெற்ற போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், சில அமைப்புகள் மற்றும் கட்சியின் பெயரை சொல்லி, அவர்களுடனான தொடர்பை மாணவர்கள் முறித்துகொள்ள வேண்டும் என்றும், தோழர் என்று கூறிக்கொண்டு மாணவர்களிடம் பேசுபவர்களிடமும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார். இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதை தொடர்ந்து, நாம் தமிழர், புரட்சிகர மாணவர் முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மற்றும் இந்திய இசுலாமிய மாணவர் அமைப்பு போன்ற 22 அமைப்புகள், அனைத்து முற்போக்கு சனநாயக இயக்கங்களின் கூட்டியக்கமாக ஒன்றினைந்து இன்று கோவை பிரஸ்கிளப்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மாநில துணை செயலாளர் பொன்சந்திரன் கூறியதாவது :-
கோவையில் அமைதியாக நடைபெற்ற போரட்டத்தை சீர்குலைத்ததே காவல்துறைதான்.
ஒவ்வொரு இயக்கத்தினரையும் குறிவைத்து தாக்கியிருக்கிறது கோவை மாநகர காவல் துறை. மேலும், உணர்வுப்பூர்வமாக போராடிய சில அமைப்புகளை தேச துரோகிகள் என முத்திரை குத்த பார்க்கின்றனர்.
'தோழர்' என்பது உன்னதமான வார்த்தை. பகத்சிங் முதல் சிங்காரவேலன் வரை ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய வார்த்தை. இப்படியான வார்த்தையை பயங்கரவாத வார்த்தையாக சித்தரித்துள்ளனர் 'தோழர்' என்று கூறுபவர்களுடனான பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்ளுங்கள் மாணவர்களே என்று காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளார். இது அரசியல் சாசனத்திற்கு எதிரனது. போலீசார் கூறிய இந்த அவச்சொல்லை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் இந்த கூட்டியக்கத்தின் சார்ப்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.
காவல் துறை அராஜகத்தை மறைத்துக்கொள்வதற்கான முயற்சியே இது.
அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய காவல் ஆணையர் அமல்ராஜை இடை நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும், இந்த பிரச்சனையில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்வதுடன் பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
இந்த கோரிக்கையின் மிது நடவடிக்கை இல்லை என்றால் தொடர்ந்து தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.