கோவை உக்கடத்தில் முஸ்லீம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தமிழக அரசுடன் இணக்கமாக நல்லுறவை பேணவே கேரளா விரும்புகிறது எனவும் நீர் பகிர்தல் தொடர்பான பிரச்சனைகளை இருமாநி்ல அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் அந்த விவகாரத்தை கேரள அரசு பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். முல்லை பெரியார் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தின் தண்ணீர் தேவையை கேரளா புரிந்து இருப்பதாகவும் உம்மன்சாண்டி தெரிவித்தார்.