பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பவானியை காப்போம் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள், மேட்டுப்பாளையம் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் மின்சாரத்திற்காக கூமபாளையம், சமயபுரம் ஆகிய இடங்களில் கதவணை கட்டப்பட்டு இருப்பதை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், பவானி ஆற்றில் சாக்கடை கழிவுகள், ஆலை கழிவுகள் கலப்பதால் ஆற்று நீரை பயன்படுத்தும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது எனவும், கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, கேரளாவில் தேக்குவட்டை உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை கட்டப்படுவதால் பவானி ஆற்றில் தண்ணீர் வருவது முற்றிலும் தடைபட்டு போகும் எனவும், எனவே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.