கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தரை பணி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி அப்பல்கலைக் கழக முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தர் கணபதியை பணி நீக்கம் செய்யக்கோரியும், அப்பல்கலைக் கழக முன்னாள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து, புகார் அளிக்க வந்த முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் தெரிவிக்கையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் 76 பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும், இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.
மேலும், துறைக்கு சம்மந்தமில்லாதவர்களிடமும், தகுதியற்ற நபர்களிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்து இருப்பதாகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பேராசிரியர் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டுமெனவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தரையும் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் பட்டதாரிகள் வலியுறுத்தினர்.