தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்) இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை- ஆண்) இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும பெண்) மற்றும் தீயணைப்புத் துறை (ஆண்) ஆகிய பதவிகளுக்கான மொத்தம் 15 ஆயிரத்து 711 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் 21.5.2017ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
இதற்கான வயது வரம்பு 1.7.2017 அன்று 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் 18 முதல் 26 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், ஆதி திராவிடர் அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் 18 வயது முதல் 29 வயதிற்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் 45 வயதிற்கு மேற்படாதவர்களாகவும், ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும் 18 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த தேர்விற்கு கல்வித் தகுதி 10-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த எழுத்துத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் தபால் நிலையங்களில் கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம், சென்னை- 8 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பிப்ரவரி 1ம் தேதி முதல் தேர்வு வரை இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இதில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.