அவசர நேரத்தில் பொதுமக்கள் போலீசாரை சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்ட காவல் துறை ஆணையர் அலுவலகத்திலும் காவல் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த கட்டுபாட்டு அறைக்கு சில மர்ம நபர்கள் தொடர்ந்து தவறான தகவல்களை கொடுத்தும், தொல்லை கொடுத்தும் வந்தனர். அவ்வாறாக போலியான அழைப்புகள் குறித்து கணக்கெடுத்த போது, ஒரே செல்போனை பயன்படுத்தி இருவர் ஆயிரத்து 300 முறைக்கு மேல் அழைத்தது தெரியவந்தது. தொடர்ந்து, கோவை சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, போலி அழைப்புகள் கொடுத்தது வேடபட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (41) என்பவரும், ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் பொழுது போக்கிற்காக காவல் கட்டுப்பாடு அறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு அழைத்து தவறான தகவல்கள் கொடுத்ததும், இவர்களது அழைப்பை பெண் காவலர்கள் எடுக்கும் போது ஆபாசமாக பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.
இவர்கள் இருவரிடம் இருந்து மட்டும் ஆயிரத்து 390 அழைப்புகள் வந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, கோவை மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ் கூறியதாவது:-
'கோவை மாநகரில் செயல்படும் கட்டுப்பாடு அறையில் ஆறு தொலைபேசி இணைப்புகள் உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் அழைப்புகள் கட்டுப்பாட்டு அறைக்கு வருகிறது. அதில், 10 முதல் 15 அழைப்புகளே உண்மையானவையாக இருக்கிறது. மற்ற அழைப்புகள் போலியாகவும், காலம் தாழ்த்தியும் கிடைப்பவை.
காவல் கட்டுப்பாடு அறைக்கு வரும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படுகின்றன. அவை போலி அழைப்புகள் என்று தெரிய வரும் நேரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும், அதி நவீன மென்பொருட்கள் உபயோகித்து பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு உடனடியாக பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இது போல போலி அழைப்புகள் விடுப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்'.
இவ்வாறு அவர் கூறினார்.