மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்து டிஐஇ தலைவர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் தேசிய ஊரக வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு ஒதுக்கீடு செய்திருப்பது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். வேலைவாய்ப்புகள் அதிகம் ஏற்படுத்தும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் லாபத்திற்கு முதல் 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வரிகட்ட தேவையில்லை என்பதில் தற்போது முதல் 7 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வரி கட்டதேவையில்லை என்று மாற்றம் கொண்டுவந்திருப்பது நல்ல அம்சம்.
ரூ.50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கான வருமானவரி 30 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ரூ.2 கோடி வரை விற்பனை செய்யும் சிறுதொழில் அமைப்புக்கள் உத்தேச வருமானமாக விற்பனயில் 8 சதவிகிதம் கணக்கிட்டு அதற்கு வரிசெலுத்த முடியும்.
இதை டிஜிட்டல் முறையிலோ வங்கிக்கணக்கு மூலமாகவோ செய்யப்பட்டால் 6 சதவிகிதம் மட்டுமே வருமானமாகக் கருதப்பட்டு அதற்கு வரிசெலுத்தினால் போதும்.
ரூ.2 கோடி வரை விற்பனை உள்ளவர்களுக்கு கட்டாயத் தணிக்கை இல்லை. நீண்டகால சொத்து லாபக்கணக்கீடு 3 ஆண்டுகளுலிருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது நல்ல பலன்தரும்.
ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வருமானவரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் கூடுதலாக 10 சதவிகிதம் உபரி வரி செலுத்த வேண்டும். வருமான வரி விகிதத்தைக் குறைத்திருக்கலாம். வருமான வரிச் சேமிப்புத் திட்டத்தின் அதிகபட்ச அளவை உயர்த்தாதது ஏமாற்றம்.
கருப்புப்பணத்தை ஒழிக்க பல நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் ரூ.2000 மேல் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில் தான் பெறவேண்டும். இதற்கான ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும். டிஜிட்டல் முறையில் நடைபெறப்படும் பரிவர்த்தனைகளுக்கு சேவைக்கட்டணத்தை முற்றிலும் நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.