கோவை உக்கடம் பகுதியை அடுத்து அமைந்துள்ளது கரும்புக்கடை பகுதி. கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் நூலகம், வங்கிச்சேவை, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் கோவை மாநகர செய்தித்தொடர்பாளர் அப்துல் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கரும்புக்கடை பகுதியில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அடங்குவர். நாடு முழுவதும் வங்கி மயமாக்கப்பட்டுவரும் இந்த நேரத்தில் கரும்புக்கடை பகுதியில் வங்கி வசதி இல்லை. வங்கிச் சேவைகளை பெற டவுன்ஹால், குனியமுத்தூர் அல்லது போத்தனூர் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே உடனடியாக இப்பகுதியில் தேசிய மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் தொடங்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் ஏழ்மை வர்கத்தை சார்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த நிலையில், இங்கு அரசு பள்ளியாக ஒரு தொடக்கப்பள்ளியே உள்ளது. உயர் கல்வி பெற தனியார் கல்வி நிலையங்களை நாடிச்செல்ல தயங்கும் இப்பகுதி மக்களின் படிப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு செயல்படும் தொடக்கப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
அதே போல் மாணவர்கள் பயன்பெற இங்கு நூலக வசதியும், குழந்தைகளுக்கு பூங்கா வசதியும், பெண்கள் மற்றும் கர்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிரசவ நிலையமும் அமைத்து தர வேண்டும்.
கோவையின் மையப்பகுதி என்பதால் இப்பகுதியில் எந்த நேரமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
அடிப்படை வசதிகள் மிக குறைவாக இருக்கும் கரும்புக்கடை பகுதியில் போதிய வசதிகளை ஏற்படுத்தித்தர அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

