கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில் "மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையாளர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று வருகின்றது.
மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த வார்டுகளில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி வியாழனன்று தெற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், நாய் தொல்லைகள், அடிப்படை வசதி என பல்வேறு உதவிகள் கோரி 9 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், தெற்கு மண்டல பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.