டாப்சிலிப் பகுதியில் உள்ள பழங்குடியினர் வசிப்பிடங்களுக்கு சென்று குறைகள் கேட்டறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், அப்பகுதி மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் டாப்சிலிப் பகுதியில் வனத்துறையின் மூலம் மலைவாழ் மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டு பழங்குடியினர் மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
டாப்சிலிப் பகுதியில் உள்ள எருமைப்பாறை கோழிகமுத்தி, கூமாட்டி ஆகிய வனப்பகுதியில் அனுபவத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி மேற்கொள்ள ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதிகளில் சோலார் மூலம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை அதிகப்படுத்தும் விதமான சோலார் விளக்கு அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஒவ்வொரு குடும்பத்திருக்கும் பசுமை வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு வருமானச்சான்று மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்க அலுவலர்கள் மூலம் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உடனடியாக வழங்க உத்திரவிடப்பட்டுள்ளன.
மேலும் இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க தற்பொழுது செயல்படுத்தபட்டு வரும் வனத்துறை வாகனத்துடன் ஊராட்சி ஒன்றிய அளவில் இப்பகுதியில் மகளிர் குழு அமைத்து அதன் மூலம் ஆட்டோ வழங்கி அக்குழு மூலம் கண்காணித்தடவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இங்கு நியாயவிலைக்கடை அமைக்கப்பட்டு குடும்ப அட்டைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் மேலும் புதிய குடும்ப அட்டை பெற உள்ளவர்களுக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் இங்குள்ள கல்வித்தகுதிக்கேற்ப ஆண் பெண் இருபாலருக்கும் தேவையான தொழிற்பயிற்சி வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. திட்டங்களை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
இப்பகுதியில் உள்ள பழங்குடியின பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் வனத்துறை அலுவலர்களிடம் தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிப்பதுடன் தங்கள் பகுதிகள் நடக்கும் சிறப்பு முகாமிலும் தங்கள் தேவைகளை கேட்டு பெற்றுக்கொள்வதுடன் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துகொள்ளும் வகையில் தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வேண்டும்.
புதுவாழ்வு திட்டத்தின் மூலம் சுயத் தொழில் செய்து வாழ்வில் முன்னேறும் வகையில் பயிற்சி அளித்து சுயஉதவிக் குழுக்கள் மூலம் வங்கியில் இருந்து கடன் பெற்றுத் தந்து சுயத் தொழில் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் இப்பகுதிகளில் சார் ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அவ்வபோது மலைவாழ் மக்கள் வாழ்வதாரம் முன்னேற்றம் குறித்து கண்காணிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. அவர்களிடமும் தங்கள் குறைகளை தெரிவித்து சரிசெய்து கொள்ள வேண்டும்.
இதேபோல் மாவட்டத்தில் மற்ற பகுதியில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்களின் பகுதிகளுக்கு சென்று தேவையான அடிப்படை வசதிகள் அமைத்துகொடுக்கப்பட்டு வருவதுடன் இதேபோல் தனியாக நியமிக்கப்பட்ட குழு கண்காணித்து சிறப்பு முகாமிட்டு தேவைகள் நிறைவேற்றுப்பட்டு வருவதுடன் இதேபோன்ற சிறப்பு முகாம்களை மலைவாழ் பழங்குடியினர் நல்லமுறையில் பயன்படுத்தக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

பின்னர் கோழிக்கமுத்தி பகுதியில் செயல்பட்டு வரும் யானைகள் முகாமிற்கு சென்று அங்கு பயிற்சி பெற்று வரும் மூன்று கும்கி யானைகளை பார்வையிட்டதுடன் யானைகளுக்கு வழங்க உள்ள உணவுப்பொருட்களையும், உணவு தயாரிக்கும் கூடத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சுப்பையா, பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, வனவர்கள் முனியாண்டி, சேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.