பல்லடம் அருகே போலீசாரின் வாகன சோதனையில் புத்தம் புதிய கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை வைத்து கடத்தி செல்லப்பட்ட 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் டி.எஸ்.பி செளமியா மற்றும் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர், பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக புத்தம் புதிய கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.
இந்நிலையில், அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார், சோதனை மேற்கொண்டனர். அதில், ஜெயம் பேக்கர்ஸ், மூவர்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது, ஆனால், அந்த கண்டெய்னர் காலியாக இருந்துள்ளது.
இதுகுறித்து ஓட்டுனரிடம் கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தின் உள்ளே சென்று பார்த்த பொழுது வாகனத்தின் வெளிப்புறம் இருந்த நீளத்திற்கும் உள்புறம் இருந்த நீளத்தின் அளவிற்கும் வித்தியாசம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் வாகனத்தை முழுவதுமாக சோதனை செய்ததில், வாகனத்தின் உட்புறம் 3×8 என்ற அளவில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையை திறந்து பார்த்த பொழுது உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கண்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த டைட்டஸ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியதும், இன்னும் பதிவு எண் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.
குட்காவை கடத்தி செல்வதற்காகவே கண்டெய்னர் லாரி வாங்கி, அதில் ரகசிய அறை அமைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் லோகேஸ்வரனை (23) போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான வாகன உரிமையாளர் டைட்டஸ் என்பவரை தேடி வருகின்றனர்.
இதனிடையே ரூ.23 லட்சம் மதிப்பிலான புத்தம் புதிய கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த 300 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
குட்கா கடத்தி செல்வதற்காகவே புதிய கண்டெய்னர் லாரி வாங்கி அதில் ரகசிய அறை அமைத்தது போலீசார் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.