வால்பாறை அருகேயுள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த குட்டியுடன் கூடிய 6 காட்டு யானைகள், நேற்றிரவு, முரளி என்பவரது வீட்டின் சுவர் மற்றும் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வால்பாறை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியில் நேற்றைய தினம் குட்டியுடன் 6 காட்டு யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி சுற்றித்திரிந்து வருகின்றன.
இதனிடையே, இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அந்த காட்டு யானைகள் கூட்டம், அப்பகுதியை சேர்ந்த முரளி என்பவரது வீட்டின் சுவரை இடித்து சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் ஜன்னல்களையும் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் யானைகள் சாலையில் நடந்து சென்று வழிகாட்டும் பதாகைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளன. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள், காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.