தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமையிலான அரசு இருக்கின்றதோ என்ற எண்ணம் தோன்றுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் ஏறுதழுவுதல் போன்ற சின்னங்கள் ஏற்கனவே பல இடங்களில் நிறுவியிருந்தாலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று் ஜல்லிகட்டு நினைவாக மெரினாவில அச்சின்னத்தை அமைக்கலாம் என விருப்பம் தெரிவித்தார். பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கண்டிப்பதாகவும் தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்கும் சேர்த்தே தண்ணீர் கேட்பதாகவும் கூறியதுடன் கேரளாவிற்கு அனைத்து உணவுகளும் தமிழகத்தில் இருந்தே கொண்டு செல்லும் நிலையில் அதனை விளைவிக்கவே தமிழகத்திற்கு தண்ணீர் கேட்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் சென்னையில் இரண்டு சரக்கு கப்பல் மோதிக்கொண்டதால் எண்ணெய் கசிவு என கூறப்படும் நிலையில் அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த சூழலில் எண்ணையை வாளியை வைத்து அள்ள முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், வெளிநாடுகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை போல அறிவியல் பூர்வமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.எண்ணை படலம் படர்ந்திருப்பது என்ன மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியவில்லை எனவும் மக்கள் மனதில் பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டிய சீமான்,
தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தும் பிரதமர் மோடி அதற்கான வருத்தம் கூட தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமையிலான தமிழக அரசு இருக்கின்றதோ என எண்ண தோன்றுகிறது எனவும் ஜெயலலிதா இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் பேரணி நடத்த அனுமதி வழங்காத நிலையில் தற்போது சென்னையிலேயே அவர்களுக்கு பேரணிக்கான நடத்த அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி விட்டதாகவும் எப்போது தேர்தல் நடத்தினாலும் அதை எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்த அவர்,சென்னையில் கலவரத்தின் போது காவலர்கள் தாமாகவே வாகனங்களை கொளுத்தி இருக்க முடியாது எனவும் அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கும் எனவும் அந்த உத்திரவை வழக்கியவர் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் மெரினாவில் 144 தடையே அவசியமற்றது எனவும் இந்த உத்தரவு அச்சத்தை ஏற்படுத்துவதை போல இருக்கிறது எனவும் சீமான் தெரிவித்தார்.