கோவை மாவட்டம் அல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வை காண வந்திருந்தனர்.
கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியாகும்.
இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் மருதமலைக் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோவை மாவட்டம் அல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை சுப்பிரமணிய சுவாமி தரிசிக்க வந்திருந்தனர்.
சூரசம்ஹார நிகழ்வின் போது பக்தர்கள் "அரோகரா...அரோகரா..." என்று விண்ணை முட்டும் அளவிற்கு பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
இன்று அதிகாலை, கோ பூஜையுடன் கோவில் திறக்கப்பட்டு முருகனுக்கு சந்தனம், பன்னீர், தேன் என 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரமான ராஜ அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைப்பெற்றது.
முன் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்தில், வீரபாகு குதிரை வாகனத்திலும், தங்க கவசத்தில், தங்க மயில் வாகனத்தில் மருதமலை சுப்ரமணியர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, இன்று இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கோவிலின் மேலே அனுமதிக்கப்படவில்லை. வாகனங்களை அடிவாரத்திலேயே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனவே, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த மினி பேருந்துகளில் சென்று வந்தனர்.
கூட்டத்தை கருத்தில் கொண்டு மூன்று தனியார் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டது.
இருப்பினும், ஒரு பேருந்து 39 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் கோவிலுக்கு செல்ல வேண்டிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
அதேபோல் வரிசையில் நிற்க முடியாதவர்கள் படிக்கட்டு வழியாக கோவிலுக்கு நடந்தே சென்ற காட்சிகளையும் காணமுடிந்தது.
மலைக்கோவில் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பொது வழி மற்றும் சிறப்பு தரிசனம் என இரு பிரிவுகளாக பிரித்து தடுப்புகள் அமைக்கப்டிருந்தது.
படி வழியில் ஏறி ராஜகோபுரம் வழியாக இறங்க வேண்டும் என்ற ஒரு வழிப் பாதையாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ், மருத்துவ முகாம் என்று சிறப்பு ஏற்படுகளுடனும் வழியில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் வடவள்ளி போலீசார் செய்திருந்தனர்.