கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூற்றாண்டு விழா ஜோதி இன்று வந்தடைந்தது. இதனை தொடர்ந்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா ஜோதியுடன் கூடிய பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியது.
கோவை: தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கடந்த 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா தற்போது மாநிலம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த 10-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நூற்றாண்டு விழா ஜோதி, அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கிறது.
அதன்படி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூற்றாண்டு விழா ஜோதி வந்தடைந்தது. இதனை தொடர்ந்து, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா ஜோதியுடன் கூடிய பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியது.
மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் மாவட்ட பொது சுகாதார துறை இயக்குனர் அருணா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்த பேரணியில், சுகாதாரம் மற்றும் மருத்துவம் குறித்த பதாகைகள் ஏந்தியபடி சென்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முடிவடைந்தது.
முடிவில், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் இசைக்கேற்றபடி நடனமாடி நூற்றாண்டு விழாவை குத்து ஆட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.