அகில இந்திய முதல்வர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து 18வது சர்வதேச கருத்தரங்கு மாநாட்டினை "தேசிய மற்றும் சர்வதேச வளர்ச்சியில் உயர்கல்வியின் பங்கு" என்னும் தலைப்பில் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடத்தியது. இதில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இம்மாநாட்டினை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

விழாவில் அவர் பேசிசுகையில்; தமிழக உயர்கல்வியைப் பொறுத்தவரை, எளிதில் பெறுதல், சரிசம வாய்ப்பு, தரம் மற்றும் திறன் வளர்த்தல் அடிப்படையில் இயங்கி வருகிறது. அதாவது எல்லோருக்கும், சமமான, தரமான, வேலை வாய்ப்புக்கு ஏற்ற வகையிலான உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கமாகும். இந்த சிந்தனையை, தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கே முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2014-2015 கணக்குப்படி, மொத்தம் 757 பல்கலைக்கழகங்கள், 29,506 கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்ழல் மட்டும், 58 பல்கலைகழகங்கள், 2,470 கல்லூரிகள் உள்ளன. இதில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 67 கல்லூரிகளைப் புதியதாகத் தெடங்கி மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்திய அளவில் 18 முதல் 23 வயதிற்குட்ட மக்கள் தொகையில், சராசரியாக ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 27 கல்லூரிகள் என்ற நிலையில், தமிழ்நாடு அதையும் தாண்டி 37 கல்லூரிகள் என்ற நிலையை எட்டி, முதன்மையிடத்தினைப் பெற்றுள்ளது. உயர்கல்வி பெறுவதில் இந்திய சராசரியான (GER) ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 23.6 சதவீதத்தைத் தாண்டி தமிழ்நாடு 44.8மூ சதவீதத்தினை எட்டி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இதேபோல் பெண்கள் உயர்கல்வி பெறுவதில் இந்திய சராசரியான (GER) ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 22.7 சதவீதத்தையும் தாண்டி 42.7 சதவீதத்தை அடைந்துள்ளது. வேலை வாய்ப்பினைப் பெறுவதற்குத் தேவையான தொழில் வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தொழில் நிறுவன வளத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக உருவாக்கித்தரப்பட்டுள்ளது.
இதேபோல், இந்தியாவில் வேலைத்திறனில் தமிழ்நாட்டின் பங்கு 16 சதவீதம், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் GDP தமிழ்நாட்டின் பங்கு 8.4 சதவீதமாக உள்ளது. இவைகள் எல்லாம் கல்வி, வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுக்கான ஆதார வளங்களாகும். இதனைக்கருத்தில் கொண்டே பல்கலைக்கழகம் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்வி வளமும், தொழில் வளமும் இணைந்து இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் சமூக வளம் சிறப்படைந்து வருகிறது. வேலைவாய்ப்பினை வழங்குவதில் மட்டுமல்ல, தரமான உயர்கல்வியை வழங்குவதிலும் தமிழக உயர்கல்வித்துறை இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளது. உயர்கல்வி பெறுபவர்கள் எண்ணிக்கை மட்டுமல்ல வேலைவாய்ப்பினைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

பல்கலைக்கழகங்களிலும் கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்களும், பொறியியல் கல்லூரிகளில் படிப்பவர்களும், பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிப்பவர்களும், தங்களுடைய படிப்பினை முடித்தவுடன் வேலை வாய்ப்பினைப் பெறும் வகையில் திறன் மேம்பாட்டுப்பயிற்சியும், தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சியும், மென்திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களின் சென்ற ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு வேலைவாய்ப்பினை வழங்குவதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 15.95 லட்சம் பேர் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
இந்திய அளவில் உயர்கல்வி, நிறுவனங்களை மதிப்பீடு செய்வதிலும், தரவரிசைப்படுத்துவதிலும் உயரிய நிறுவனமாக இருப்பது தேசியத் தர நிர்ணயக்குழு -NAAC அதாவது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு. இது UGC-யின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் உள்ள 2,734 உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தினை மதிப்பீடு செய்தது, இதில் 1,438 பொறியியல் கல்வி நிறுவனங்கள், 609 மேலாண்மைக்கல்வி நிறுவனங்கள் 454 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அடங்கும். இதில், பொறியியல், மேலாண்மை, பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகள் என்று வகைப்படுத்தி, அதில் தலைசிறந்த 25 கல்லூரிகளைத் தேர்வு செய்தது, அப்படித்தேர்வு செய்ததில், தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், நிர்வாகிகள் தங்கள் அலுவலகத்தால் பல்வேறு திட்டங்களை வகுத்துத் தரவேண்டும். அதனை உங்களைப் போன்றவர்களால் தான் செய்ய முடியும். ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை. அந்த மாற்றத்தை ஏற்படுத்தித்தரும் பொறுப்பு உங்களையே சாரும். உயர்கல்வியைப் பொறுத்தவரை, தரமான கல்வி என்பதுடன், திறன் மிகுந்த கல்வி என்பதும் முக்கியம்,அதற்கான திட்டங்களை, செயலாக்கங்களை தாங்கள் தான் உருவாக்கித்தர வேண்டும்.
கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் இதுபோல ஒன்றுகூட, கருத்தரங்குகள், சிந்தனை அரங்குகள் வாயிலாக புதிய கல்விச் சிந்தனைகளை உருவாக்கித் தரவேண்டும். புதிய செயலாக்கங்களை வகுத்துத் தரவேண்டும். அந்த வகையில் இந்தக் கருத்தரங்கு அனைவருக்கும், பயன்தரக்கூடிய வகையில் அமையும் என நம்புகிறேன் எனக் கூறினார்.
இக்கலந்தாய்வு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சிறப்புரையாற்றினார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கணபதி, அகில இந்திய முதல்வர்கள் சங்கத்தின் தலைவர் சுபாஷ் பிரம்பார்ட் கருத்தரங்க உரையாற்றினார்கள். ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் பாபாஞானக்குமார் இக்கருத்தரங்கினை வழிநடத்தினார்.
இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்து பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தலைசிறந்த கல்வியாளர்கள் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டு கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்து விவாதிக்க உள்ளனர். இக்கருத்தரங்க மாநாடு இந்தியாவில் கல்வித்துறையில் பல முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்களை கொண்டுவர உள்ளது.