வால்பாறை அடுத்த அக்காமலை எஸ்டேட்டில் உள்ள மாரியம்மன் கோவில் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து உள்ளே சென்று, பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வால்பாறை அருகேயுள்ள அக்காமலை எஸ்டேட்டுக்கு உட்பட்ட 21.பாடி பகுதியில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளன.
இதனிடையே அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்த இரும்பு கேட், ஜன்னல் கதவு போன்றவற்றை உடைத்துள்ளன.
மேலும் உள்ளே சென்ற யானைகள் அங்கிருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு விரட்டினர்.
இந்நிலையில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.