கோவை அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் ஊற்றி அழிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்களில் இந்தி எழுத்துக்களில் ஊர் பெயர்கள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.
இதன்படி கோவையை அடுத்த நிலம்பூர் பகுதியில் சேலம்- கொச்சின் புறவழிச்சாலை மைல்கல்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி வந்து, இந்தி எழுத்துக்களை அழிக்க முயற்சித்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் காவல் துறை தடுப்புகளை மீறி இந்தி எழுத்துக்கள் மீது தார் ஊற்ற முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, இழுத்துச்சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் இணை மொழியாக இருக்குமென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதியளித்ததற்கு மாறாக, மத்திய அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மத்திய அரசின் நலத்திட்டங்களில் இந்தியை திணித்து வருவதாக கூறிய அவர்கள், மத்திய அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.