வடவள்ளியில் அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்குள் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகளை கண்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், வனத்துறையினர் யானைகளை பத்திரமாக விரட்டினர்.
கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகின்றன. அவ்வாறு வெளியேறும் காட்டு யானைகள் பாரதியார் பல்கலைகழகம் பின்புறம் உள்ள அனுபாவி சுப்பிரமணியர் கோவில் அருகே வந்து மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் செல்லும்.
இந்நிலையில், நேற்றிரவு அனுபாவி சுப்பிரமணியர் கோவில் அருகே குட்டிகளுடன் இறங்கிய காட்டு யானைகள், வழி தவறி வடவள்ளி அருகே உள்ள அண்ணா பல்கலைகழக வளாகத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானைகள் அங்கிருந்த துணை மின் நிலைய வளாகத்திலேயே நீண்ட நேரமாக முகாமிட்டு இருந்தன. இந்நிலையில், யானை கூட்டத்தை கண்டு அச்சமடைந்த துணை மின் நிலைய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து உயரமான பகுதிக்கு சென்றனர்.
இதனையடுத்து யானைகள் குறித்து கோவை வனச்சரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் அங்கு வந்த, கோவை வனச்சரக வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி குட்டியுடன் இருந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனை தொடர்ந்து மீண்டும் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அப்பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இதனையடுத்து யானைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, எந்த சேதமும் ஏற்படாமல் பத்திரமாக விரட்டப்பட்டதால் துணை மின் நிலைய ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், மேற்கொண்டு யானைகள், அப்பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.