கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படைக்கான ஏ சான்றிதழ் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்விற்கு, தமிழ்நாடு 4 பெட்டாலியன் தேசிய மாணவர் படை நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்ணல் செந்தில் குமார் தலைமை வகித்தார்.

இதில், கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலை மற்றும் தாராபுரம் பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு தேசிய மாணவர் படை பயிற்சி முடித்த பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 400 பேர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இத்தேர்வின் போது அணி நடை பயிற்சி, துப்பாக்கி கையாளுதல் பயிற்சி உட்பட பல பாடங்களில் இருந்து எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதனை 4 தமிழ்நாடு பெட்டாலியன் தேசிய மாணவர் படை ராணுவ பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி என்சிசி அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.