கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத் தூண் வைக்கக் கோரியும், காதலர் தினத்தைக் கண்டித்தும் மற்றும் அயல்நாட்டு குளிர்பானத்தை தடைசெய்யக் கோரியும் பாரத் சேனா அமைப்பின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதியன்று கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பயங்கரவாதிகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நடைபெற்று தற்போது 19 ஆண்டுகள் ஆவதால் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.பி.சாலையில் நினைவுத் தூண் அமைக்க கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அம்மனுவில் பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் என்ற போர்வையில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளை தடுக்க வேண்டும் என்றும் பாரத் சேனா சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பாரத் சேனா கோவை மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டி, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அயல்நாட்டு குளிர்பானங்கள் மற்றும் அயல்நாட்டுப் பொருட்களை விற்பனை செய்வதை தடைசெய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.