தொடர்மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு விலங்குகள் இடம்பெயர தொடங்கியுள்ளதால் வாகன ஒட்டிகள் கவனமாக பயணிக்கவும், விலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுக்க கூடாது எனவும் அறிவுறுத்தல்.
நீலகிரி: தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கத் தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாககாட்டு யானைகள், காட்டு எருமைகள், கரடிகள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வர தொடங்கியுள்ளன.
அவ்வாறு வரும் வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை ஓரங்களுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் மசினகுடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொரப்பள்ளியில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லக்கூடிய கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை அருகே காட்டு எருமைகள் மேய்ச்சலுக்காக கூட்டம் கூட்டமாக வருகின்றன. மேலும் அப்பகுதியில் கரடிகள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், அவ்வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனபுலிகள் காப்பக நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளின் அருகில் சென்று வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.