திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தமிழக அரசின் அரசாணை 152 ஐ திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வருகின்ற 16ஆம் தேதி காலை 11 மணிக்கு மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதாகவும் பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல ஆணையாளர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சிகளில் பணியாளர்களை குறைக்கும் வகையிலான அரசாணை 152ஐ தமிழக அரசு திரும்ப பெற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இதன் பின்னறாக மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வாக்கு அளித்தார்.