கோவை போத்தனூர் அருகே ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்த முயன்றவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவிற்கு சிலர் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். ரேசன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை போத்தனூர் அருகே ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பறக்கும் படை தனி வட்டாச்சியர் முத்துக்குமார், மற்றும் குடிமைபொருள் குற்றப்புலனாய்வு ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் போலீசார் போத்தனூர் குருசாமிபிள்ளை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரான சிவதாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.