பாலக்கொலா ஊராட்சியில் ரூ. 29.40 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.அம்ரித் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்டு பாதுகாப்பு வேலி அமைத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் பாலக்கொலா ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ. 29.40 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.அம்ரித்நேரில் ஆய்வு செய்தார்.
உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கொலா பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் இந்திரா நகரில் முத்து வீடு முதல் பாபு வீடு வரை ரூ.4.40 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் நடைபாதையினை மாவட்ட ஆட்சிதலைவர் எஸ்.பி.அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து பீ.மணியட்டியில் ரூ. 3 இலட்சம் மதிப்பில் பால் சொசைட்டி முதல் ஆல்துரை வீடு வரை நடைபெற்று வரும் சிமெண்ட் கான்கிரீட் நடைபாதையினையும், பழுதடைந்தஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளியின் கட்டடத்தை தரைமட்டமாக்கி 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டார்.
மேலும் இந்திரா நகர் பகுதியில் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மீட்கப்பட்ட இடத்திற்கு வேலி அமைத்து பாதுகாப்பு செய்யப்படுவதை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.