அகில இந்திய கல்லூரி முதல்வர்கள் சங்கம் மற்றும் கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து 18-வது சர்வதேச கருத்தரங்கினை "தேசிய வளர்ச்சி மற்றும் சர்வதேச முன்னேற்றத்தில் உயர் கல்வியின் பங்கு" என்னும் தலைப்பில் இக்கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

இக்கருத்தரங்கினை தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்ர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தனர்.

இதில், இந்தியா முழுவதுமிருந்து 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்று, 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இக்கருத்தரங்கின் நிறைவு விழா ஞாயிறன்று ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக கோவா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வருக்சாகினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். மேலும், கோவை அவினாசிலிங்கம் பல்கலை கழகத்தின் வேந்தர் முனைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.

மேலும், இந்நிகழ்வில் அகில இந்திய கல்லுரி முதல்வர்களின் அமைப்பின் தலைவர் சுபாஷ் பிரம்பாட், துணைத் தலைவர் பி.சேகர், இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் சுந்தரராமன், முதல்வர் பாபாஞானக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் கோவா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேசிய போது, கல்வியின் மாற்றத்தில் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கினை எடுக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ற கல்வித் திட்டங்களை அரசுடன் இணைந்து உருவாக்க வேண்டும்.
மாணவர்களின் வேலைத் திறனை உயர்த்தி வேலைவாய்ப்பினை கொடுக்க வேண்டும். உயர்கல்வியின் சதவிகிதத்தினை நாம் உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.
அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பேசிய போது, படித்த கல்வி மனிதர்களை பண்புள்ளவர்களாக உருவாக்க வேண்டும். வேலைத் திறன், தொழில்நுட்பங்களை போதிப்பதுடன், வாழ்க்கை கல்வியினை கற்றுக்கொடுக்க வேண்டும். கலாச்சார கல்வி அனைத்து பண்புகளையும் கற்றுக்கொடுக்கும் எனக் கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழமங்களின் நிர்வாக அறங்காவலர் கூறியபோது, கற்றலில் தொழில்நுட்பத்தினை அதிகமாக பயன்படுத்த வேண்டும். நவீன வளர்ச்சிக்கு உட்பட்டு மற்றும் எதிர்காலத்தினை கருத்தில்கொண்டு கல்வித் திட்டத்தில் மாற்றங்களை தொழில்நிறுவனங்களுடன் இணைந்து கொண்டு வர வேண்டும். இதில், மாணவர்களை நேரடியாக பயிற்சி எடுத்து கற்கும் முறையினை அதிகமாக கொண்டு வரவேண்டும் எனக் கூறினார்.