கோவையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாலும், நோய் தாக்குதல் காரணமாகவும் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடியே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடியாகும் தக்காளிகள் மூட்டை மூட்டையாக நாச்சிபாளையம் தக்காளி சந்தையில் குவிந்து வருகிறது. இதனிடையே அண்மையில் பெய்த மழையால் தக்காளியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் சந்தையில் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விற்பனைக்கு எடுத்து வந்த தக்காளிகளை பாலத்துறை சாலையிலேயே விவசாயிகள் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
மேலும் ஒரு சிலர் தோட்டத்தில் போதிய விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதுதொடர்பாக வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விவசாயிகள் தற்போது வந்துள்ள தக்காளியை பாதிப்பு இருந்தால் அப்படியே செடியில் விடாமல் பறிக்க வேண்டும் அப்போது தான் அடுத்து வளரும் தக்காளி சரியாக வளரும்.
இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.