சூலூரில் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பம்பை அடித்து உற்சாகத்துடன் ஒயிலாட்டம் ஆடிய கோவை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பார்வையாளர்களை ஆச்சிர்யத்தில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியில், கவுமார மட ஆலய ஆதீனம் குருமரகுருபர சாமிகள், சூலூர் தொகுதி எம்எல்ஏ கந்தசாமி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் பாரம்பரிய ஒயிலாட்டத்தை மீட்டெடுக்கும் விதமாக ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ். சமீரன், கவுமார மட ஆலய ஆதீனம் குருமரகுருபர சாமிகள், சூலூர் தொகுதி எம்எல்ஏ கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒயிலாட்ட அரங்கேற்றத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் பல்வேறு ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் ஆகியோர் நடனம் ஆடினர் காண்போரை வியப்பில் ஆழ்த்தினார். ஆரம்பம் முதலே நடனத்தை ரசித்த கோவை மாவட்ட ஆட்சியர், ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து நடனத்தை குறித்து கேட்டறிந்து, பம்பை அடித்து ஒயிலாட்டம் ஆடினார்.
ஒயிலாட்டக் கலைஞர்களுடன் ஆட்சியர் ஒன்று சேர்ந்து நடனமாடியது அங்கிருந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
இது குறித்து ஒயிலாட்ட பயிற்சியாளரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான கனகராஜ் கூறுகையில், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமம் தோறும் இலவசமாக ஒயிலாட்டம், காவடியாட்டம் கற்றுக் கொடுத்து வருகிறோம்.
கிராமிய கலைகளை பயிலும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் கூறுகையில் வீட்டிலேயே முடங்கி இருந்த தங்களுக்கு இது போன்ற பயிற்சி மிகவும் உற்சாகத்தையும் மன வலிமையும் தருவதாக உள்ளது என்றனர்.