கிணத்துக்கடவு வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விதிகளை மீறி செயல்பட கூடாது என்றும், அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வைத்து பாறைகளை உடைக்க கூடாது என கல்குவாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நெ.10 முத்தூர், குதிரையாலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்குவாரிகளில் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வைத்து பாறைகளை உடைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் கனரக வாகனங்கள்இயக்கப்படுவதால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்து இருந்தனர்.
இதுதொடர்பாக கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்றிரவு வட்டாட்சியர் மல்லிகா தலைமையில் விவசாயிகள் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் இடையேயான ஆலோசனை கூட்டம்நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதில். அரசின்விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுகின்றன. அதிக சத்தம் கொண்ட வெடிகளை வைத்து பாறைகளை உடைக்கப்படுகின்றன.
இதன் காரணமாக வீடுகளில் சேதம் ஏற்படுவதோடு, விலை நிலங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாறை கற்கள் கொண்டு செல்வதால் தார் சாலைகளும் சேதமடைந்து குண்டு குழியுமாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசிய வட்டாட்சியர், அரசின் விதிகள் படி கல்குவாரியை இயக்க வேண்டும். அதிக சத்தத்துடன் கூடிய வெடிகள் வைக்க கூடாது. விளைநிலங்கள் பாதிக்காத வகையில் பாறைகளை உடைக்க வேண்டும் என்று கல்குவாரி உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.