மின் இணைப்பு பெற ரூபாய். 5000 லஞ்சம் பெற்ற மலுமிச்சம்பட்டி மின் வாரிய போர்மேன் சங்கர் கணேஷ் மற்றும் இளமின் பொறியாளர் சுப்பிரமணி ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (28), இவர் மலுமிச்சம்பட்டி எம்.ஜி.பி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார்.
மேலும், இதற்காக இணைதளத்திலேயே ரூ.2,828 கட்டணம் செலுத்தியுள்ளார். மின் இணைப்பு வழங்குவது குறித்து கார்த்திக் மலுமிச்சம்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் இருந்த இளமின் பொறியாளர் சுப்பிரமணியன் (50) என்பவரிடம் கேட்ட போது, மின் இணைப்பை வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
அவ்வளவு பணம் இல்லை என கூறியதால், ரூ.5 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பு கொடுப்பதாக சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், அந்த பகுதியில் மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் முடிந்து இணைப்பு கொடுக்கப்பட்டதாக இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஆனால் பணம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என கூறியதால், கார்த்திகேயன் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் கார்த்திகேயனிடம் இரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல மலுமிச்சம்பட்டி மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்ற கார்த்திக், சுப்பிரமணியனுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, அலுவலகத்தில் பணியாற்றும் போர்மேன் சங்கர் கணேஷ் என்பவர் மூலம் அந்த பணத்தை வாங்கியுள்ளார்.
இதையடுத்து அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சங்கர் கணேஷ் லஞ்சம் வாங்கிய போது, அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீஸார் மலுமிச்சம்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வைத்து சங்கர் கணேஷ் மற்றும் இளமின் பொறியாளர் சுப்பிரமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மின் இணைப்பை வழங்க இவர்கள் லஞ்சம் கேட்டு வாங்கியது உறுதியானது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.