காவலர்களின் திறன் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் திறனையும் மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திறன் மேம்பாட்டு மையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் திறந்து வைத்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக உதகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு மையம் திறக்கபட்டது.
இந்த மையத்தில் காவலர்கள் புலன் விசாரணையில் தங்களது திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் சட்டம் சார்ந்த புத்தகங்கள், தடயவியல் மற்றும் இணையவழி குற்றங்கள் சார்ந்த புத்தகங்கள், உயர் பதவிக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையிலும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
திறன் மேம்பாட்டு மையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் திறந்து வைத்தார்.
காவலர்களின் திறன் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி காவலர்களின் குடும்ப உறுப்பினர்களின் திறனையும் மேம்படுத்தும் வகையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு துறையில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு போலீசாருடன் கலந்துரையாடும் வகையில் கலந்தாய்வுக் கூடம் மற்றும் சமூக வலைதள பகுப்பாய்வு கூடம் திறக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாட்டு மையம் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் இணையதள குற்றங்கள் தொடர்பான தடயவியல் மற்றும் பகுப்பாய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் தேவையான சில மென்பொருட்கள் இதுவரை இல்லாமல் இருந்ததாகவும் ஆனால் தற்போது சென்டிமென்டல் அனாலிசிஸ் எனப்படும் புதிய மென்பொருட்கள் மேற்கு மண்டலத்தில் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம் சமூக வலைதளங்களில் யாராவது வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதனை எளிதில் கண்டறியலாம் என கூறினார். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளும் ஏதேனும் ஒரு வகையில் சைபர் குற்ற சம்பவங்கள் தொடர்பாக தான் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை நீலகிரி மாவட்டத்தில் சைபர் புகார் தொடர்பாக வந்த குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்கி ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு, புகார்தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி சுதாகர் குறிப்பிட்டார்.
மேலும் அடையாள அட்டைகள் இல்லாமல் ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் யாரையும் தங்க வைக்க கூடாது என்று கூறிய அவர்,தங்கும் விடுதிகளுக்கு வருபவர்கள் தரும் செல்போன் எண் பயன்பாட்டில் உள்ளதா? என்று சோதனை செய்யவும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் நவீன ஆயுதங்கள் கொண்ட ஒமேகா-3 என்ற புதுப்படை தொடங்கப்பட்டு மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாகவும் ஐ.ஜி சுதாரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி.முத்துச்சாமி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.