கோவையில் தடையை மீறி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதுடன் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச்சட்டம் 2013-ன் படி, பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்திட முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சி சார்பில் போதுமான கழிவுநீர் உறிஞ்சி வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
எனவே மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மத்திய,மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், மால்கள், இதர நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுத்தக் கூடாது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இத்தடை சட்டத்தை மீறி எவரேனும் செயல்படும் பட்சத்தில் உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இச்செயலால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்படும் பட்சத்தில் உச்சந்திமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர்களின் குடும்பத்தினருக்கும் தலா 15 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்குவது சம்மந்தப்பட்டவரையே சாரும் என்றும் மாரகராட்சி ஆணையாளர் பிரதாப் குறிப்பிட்டுள்ளார்.