'கட்டாயப்படுத்தியதால் தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்', ஓ.பி.எ.ஸ் அதிரடி, தன்னுடைய அமைச்சரவையில் இருந்த சிலர் தன்னை கட்டாயப்படுத்தியதால் தான் முதலமைச்சர் பதவிய ராஜினாமா செய்ததாக பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெ. நினைவிடத்திற்கு வந்த அவர் சுமார் 40 நிமிடங்கள் அமைதியாக தியானத்தில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
*உண்மை நிலைமையை கூறப்போகிறேன்.
*ஜெ.வின் ஆன்மா உண்மையை கூறிவிடும்படி என்னிடம் கூறியது. அதனால், அவரின் நினைவிடத்திற்கு வந்து சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தேன்.
*ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன்.கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என என்னை வலியுறுத்தியதால் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
*வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
*முதல்வராக என்னை அமரவைத்து கொண்டு அவமானப்படுத்தினார்கள். மேலும், நீதிக்கு புறம்பாக அமைச்சர் உதயகுமார், சசிகலாவை முதலமைச்சராக வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.
*உதயகுமார் பேட்டியை பார்த்து செல்லூர் ராசு என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு மதுரை போய் அவரும் அவ்வாறே பேட்டி கொடுக்கிறார்.
*எண்ணை கசிவு குறித்து ஆய்வு நடத்த சென்றேன்.
*அந்த நேரத்தில் கூடிப்பேசி என்னை ராஜினாமா செய்ய நிர்பந்தித்தனர்.
*தொடர்ந்து, என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்தும் வாங்கினார்கள்.
*அ.தி.மு.க.வுக்கு நல்ல தலைமை வேண்டும்.தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன்.
* மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன்.
இவ்வாறு முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.
சசிகலா முதல் அமைச்சராக பொறுப்பேறக இருக்கும் நேரத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது, போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் சசிகலா-வுடன் ஆலோசனை நடத்துவதாகவும் இதுகுறித்து நாளை முக்கிய முடிவுகள் எடுக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.