உதகை அருகே உள்ள கல்லக்கொரை, பாலாடா, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களை வேட்டையாட சுற்றித்திரியும் ஒற்றை சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கும் சிறுத்தைகள், நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
குறிப்பாக உதகை அருகே உள்ள கல்லக்கொரை, பாலாடா, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் ஒற்றை சிறுத்தை, கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் வீடு, வீடாக சென்று வளர்ப்பு நாய்களை வேட்டையாட முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறுத்தை பிடிப்பதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.