ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிவரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா தைபூசம்.
தைப்பூச தினத்தன்று உலகமெங்கும் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் செல்வ, செல்வாக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் முருகபெருமான் கோவில்களில் சிறப்பு பூசைகள் செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று கோவை மக்கள் மருதமலையில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் குவியும் இந்த நாளில், மலையின் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, தன்னார்வலர்கள் பலர் தண்ணீர் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஆங்காங்கே சிறிய டெண்டுகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மருதமலை பகுதியில் சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக வடவள்ளி காவல்நிலைய ஆய்வாளர் தூயமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் "சிம்ப்ளிசிட்டி"-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தைப்பூச விழாவை முன்னிட்டு மருதமலை பகுதியில் ஒரு டி.எஸ்.பி. , மூன்று காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் மற்றும் ஊர் காவல்படையை சேர்ந்த 100 பேர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படவுள்ளனர். இன்று மாலை முதல் பாதுகாப்பு பணிகள் தொடங்குகின்றன.
சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து மலை அடிவாரத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் வரையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் கோவிலை சுற்றி 4 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் திருட்டு, ஜேப்படி போன்ற குற்றங்கள் குறையும்.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மலை அடிவாரத்தில் ஆம்புலென்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் மருத்துவமனை குழுவினரும் வரவழைக்கப்படவுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால், கார் மற்றும் லாரி போன்ற 4 சக்கர வாகனங்கள் சட்டக்கல்லூரி வளாகத்திற்கு முன்னர் நிறுத்தப்படும். இரு சக்கர வகானங்கள் அதை அடுத்து நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மருதமலைப்பகுதியில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகராட்சியின் மேற்குமண்டல துணை ஆணையர் ராமய்யா கூறியதாவது :-
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலை மற்றும் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அதிக அளவில் குவிவார்கள் என்பதால் ஒன்று மற்றும் அரை டன் கொள்முதல் திறனுடைய பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் கோவில் வளாகத்திலும், மலை அடிவாரத்திலும் வைக்கப்பட்டுள்ளன.இதனால் அப்பகுதியில் சுற்றுப்புற சூழல் மாசுபடுவது தவிற்கப்படும். அதே போல் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு குடி நீர் விநியோகம் செய்யும் வகையில் இரண்டு பெரிய தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
அடிவாரத்தில் இருந்த கோவிலிற்கு செல்லும் வழியில் ஏற்கனவே மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வெளிச்சம் குறைவாக இருக்கும் பகுதிகளில் தற்காலிக மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.இது பாதுசாரிகளின் பாதுகாப்பை மேலும் உருதிப்படுத்தும். போதுமான கழிவறை வசதிகள் கோவில் வளாகத்தில் இருப்பதால் அங்கு தற்காலிக மொபைல் டாய்லெட்டுகள் அமைக்கப்படவில்லை.
கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழு கோவில் வளாகத்திற்கும் மக்களுக்குமான தேவைகளை கண்காணித்து வருவார்கள். இதன் மூலம், எந்த விதமான தேவையாக இருப்பினும் மாநகராட்சி சார்பில் உடனடியாக ஏற்படுத்தித் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.