உதகை, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் மற்றும் மழையும் பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், படகு நிலையம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது.
நீலகிரி: வங்க கடலில் தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல், இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் நாளை அதிகாலைதான் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயலால், வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் அல்லாது சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான முதல் கனமான மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது..
அதன்படி, மாண்டஸ் புயல் தமிழகத்தை நெறுங்கி வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
உதகை, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் சூழ்ந்துள்ளதுடன் மழையும் பெய்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் இருப்பதுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
மழையின் தாக்கம் காரணமாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், முக்கிய சுற்றுலா தளங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
மழையின் தாக்கம் மதியத்திற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாகவே டிசம்பர் மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் இருக்கும், தற்போது புயல் காரணமாக மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வெளியே வர முடியாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.