கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் 3 ஆண்டுகளாக பேசவும், மூச்சு விடவும் சிரமப்பட்டு வரும் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த செபியா, உரிய இழப்பீடு கோரி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு.
கோவை: கோவை மாவட்டம் சவுரிபாளையம் அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி செபியா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செபியாவிற்கு தைராய்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதற்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தைராய்டு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறால் கடந்த 3 ஆண்டுகளாக பேசவும், மூச்சு விட முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்ட செபியா கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 2019ஆம் ஆண்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தைராய்டு பிரச்சனைக்கு இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த பின் மூச்சு திணறல் ஏற்பட்டதால், கழுத்துப் பகுதியில் துளையிட்டு தற்காலிகமாக குழாய் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து வலி ஏற்பட்டதாக கூறியதால், மீண்டும் கழுத்து துளை அடைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பேச முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, அறுவை சிகிச்சையின் போது மூச்சு குழாய் நரம்பில் சிறிய துண்டிப்பு ஏற்பட்டதாகவும், சில நாட்களில் சரியாகும் என தெரிவித்தனர். ஆனால் இப்போது வரை 3 ஆண்டுகள் ஆகியும் பேசவும், மூச்சு விட முடியாமல் தவித்து வருகிறேன்.
இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதால் பெண் குழந்தைகளுடன் சிரமப்படுவதாகவும், இ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகம், அல்லது தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
இவ்வாறு தனது மனுவில் தெரிவித்துள்ளார்.