கூடலூர் - தேவர்சோலை நெடுஞ்சாலையில் உள்ள பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென 2வது மாடிக்கும் பரவியதால் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து தேவர்சோலை செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வணிக வளாகத்தில் உசேன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் ஏராளமான பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம் பக்கம் கடைகாரர்கள் உடனடியாக கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென 2-வது மாடிக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் இந்த தீ விபத்தானது, மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது சதிச் செயலா என்பது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.