மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மின்சார வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்று, பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
திருப்பூர்: மின்சார வாரியம் சார்பில் டிசம்பர் மாதத்தில் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டது. இதில், மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.
பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது, உடுமலை சாலையில் உள்ள மின்சார அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில், வீடுகளில் தேவையில்லாத நேரங்களில் இயங்கும் மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை நிறுத்தி வைக்க வேண்டும். இரவு முழுவதும் மின் விளக்கை எரிய வேண்டிய இடத்தில் குறைந்த பல்புகளை பொருத்த வேண்டும், தண்ணீர் சூடேறிய உடன் உடனடியாக வாட்டர் ஹீட்டரை அணைக்க வேண்டும்.
தூங்குவதற்கு முன்பும், வெளியில் செல்லும் போதும் தேவையில்லாத அனைத்து மின் சாதனங்களையும் அணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்தப் பேரணியில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.